கொரோனா அளவுக்கு உடல் பாதிப்புகளுடன் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இருமல், குமட்டல், வாந்தி ஆகிய ஆகிய அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.இன்ப்ளூயன்ஸா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் 3 நாள்களில் குணமாகிவிடும். ஆனால் இதன் பாதிப்புகள் நீண்ட காலம் இருக்கும் வாய்ப்புள்ளது. காற்று மாசுபாடு இந்த வைரஸ்களுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
இன்ப்ளூயன்ஸா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வரும் சூழலில், உங்களுக்கு காய்ச்சல், சளி அல்லது இருமல் ஆகியவை ஏற்பட்டால் நீங்களாகவே ஆண்டிபாடிகளை எடுத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். இந்த காய்ச்சலால் வரும் இருமல் மூன்று வாரங்கள் நீடிக்கும். இந்த காய்ச்சல் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயதுக்கு உட்பட்டவர்களை குறிவைத்து தாக்குகிறது.
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுக்க சில நாள்களாக புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. கடும் உடல் வலி, ஓயாத இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, சளியுடன் கூடிய காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும். சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். முகம், வாய், மூக்கைத் தொடும் முன்பும் கைகளைக் கழுவுங்கள். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். இங்கு காய்ச்சல் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. இருமல் அல்லது தும்மும்போது வாயை மூடிக்கொள்ள மறக்காதீர்கள்.