பிரிட்டனில் மரபியல் மாற்றமடைந்த அதிதீவிர கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்தி வருகின்றன.
இந்நிலையில் பிரட்டனிலிருந்து சென்னை வந்த விமான பயணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தொற்று பாதிக்கப்பட்ட பயணியின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள மத்திய அரசு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட அந்த நபரை சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று (22 டிசம்பர்) நள்ளிரவு 11.59 மணி முதல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லும் மற்றும் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் இந்த வருட இறுதி (31 டிசம்பர்) வரை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா – பிரிட்டன் இடையே இயக்கப்பட்டுவரும் சுமார் 60 விமான சேவைகள் இந்த அறிவிப்பின் மூலம் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.