பாஜக மகளிரணி சார்பாக கோவையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.. இதில் அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்..
செய்தியாளர்களைச் சந்தித்த வானதி, சீனிவாசன், ” நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்ற பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கப்படுகிறது.. பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக தடைகளைத் தாண்டி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியில் அறிந்து கொள்ள முடியும்.. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 8 ஆண்டு காலத்திற்குள் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, கழிப்பிடங்கள், பெண்கள் பெயரால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், முத்ரா திட்டத்தில் 65 சதவீதம் பெண் பயனாளிகள், சுயதொழில் முனைவோர் திட்டத்தில் 85 சதவீதம் பெண்கள் என பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.. பெண்கள் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், அவர்கள் அரசியலில் சிறந்த பங்கேற்பாளர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்..
பாஜகவில் இருந்து யாரேனும் விலகிச் சென்றால் அது தற்போது மிகப் பெரிய விவாதமாகி வருகிறது.. கடந்த 2 வாரங்களில் 420 பேர் மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்துள்ளனர்.. சாதாரண தொண்டன் கூட இந்த கட்சியில் இருந்து போகக்கூடாது என்றே நினைக்கிறோம்.. சில நேரங்களில் அவர்களது தனிப்பட்ட அரசியல் ஆசை காரணமாகவும், அவர்களது தனிப்பட்ட கொள்கைகள் காரணமாகவும் செல்லும்போது எதுவும் செய்ய முடியாமல் போகிறது.. தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலம்..குறிப்பாக இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கின்ற மாநிலம் எனக் கூறுகிறோம்.. உயர் கல்வி என்று கூறும்போது, 12ஆம் வகுப்பைத் தாண்டி அவர்கள் செல்வதுதான்.. ஆனால் பரீட்சையில் இத்தனை பேர் தேர்வு எழுதாமல் இருக்கிறார்கள் என்று கூறினால், அரசாங்கம் இதனை மிகத் தீவிரமாக யோசிக்க வேண்டும்..
நீட் தேர்வு விவகாரத்தில் தொடர் போராட்டம்தான் தங்கள் ரகசியம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது என்பது, இந்த ரகசியத்தையா இவ்வளவு நாள் வைத்திருந்தார்கள்? என கேட்கத் தோன்றுகிறது.. திமுக தலைமுறை தலைமுறையாக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.. எத்தனை இளம் பெண்கள், குழந்தைகளின் உயிரை திமுக காவு வாங்கியிருக்கிறது.. இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.. திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி சொல்லும் வாக்குறுதிக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லை என்றால் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக எப்படி மாற முடியும்..
அதிமுகவில் இருக்கக் கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரிடம் கருத்து மோதல் ஏற்பட்டது.. கூட்டணியில் இது சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலை இருந்தது.. கடந்த வாரம் ஜேபி நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது, தங்கள் கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து, இதுபோன்று விரும்பத் தகாத விஷயங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்..எனவே வருகின்ற காலத்தில் இவை அனைத்தும் சரியாகிவிடும் என நம்புகிறோம்” இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.