அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார்.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜகவில் இருந்தே முக்கிய பிரமுகர்களை எடப்பாடி பழனிசாமி தம் கட்சிக்கு இழுத்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக ஐடி விங் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், செயலாளர் திலீப் கண்ணன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பாஜகவில் இருந்து அதிமுகவிற்குத் தாவினர். இதனால், அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான பேசப்பட்டு வந்தது. பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுக முக்கிய பிரமுகர்களை அடுத்தடுத்து அதிமுகவிற்கு தூக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததில் இருந்தே எடப்பாடி பழனிசாமி மீது அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். மேற்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என மார்தட்டிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், ஈரோடு கிழக்கில் ஏன் வெற்றிபெற முடியவில்லை. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி இருந்தும்கூட காங்கிரஸ் கட்சியால் எப்படி 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது? எடப்பாடியிடம் பணபலம் இருக்கிறது, இரட்டை இலைச் சின்னம் இருக்கிறது. இருந்தும் இப்படி என்றால் இல்லாவிட்டால் இன்னும் மோசமாகியிருக்கும் என்று விமர்சித்திருந்தார்.
கடந்த 11ஆம் தேதி சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அவருடன் விமான நிலைய பேருந்தில் ஒன்றாகப் பயணித்த அமமுக நிர்வாகியான ராஜேஸ்வரன் என்பவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் லைவ் போட்டார். இது கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் வந்தவர்கள் ராஜேஸ்வரனை தாக்கி, அவரது செல்போனை பறித்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், ஓபிஎஸுக்கு ஆதரவளித்து, பாஜக கூட்டணிக்கு தயாராகி வந்தார் டிடிவி தினகரன். இந்த நேரத்தில் அமமுக முக்கிய நிர்வாகிகளை இழந்திருப்பது தினகரனுக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மற்ற மாவட்டங்களிலும், அமமுகவினரை இழுக்கும் ஆபரேஷனை தீவிரப்படுத்த ஈபிஎஸ் உத்தரவிட்டிருக்கிறாராம். அமமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜக நிர்ப்பந்தித்து வருவதாகச் சொல்லப்படும் சூழலில், அமமுகவை பஞ்சராக்கி, அக்கட்சியை கழற்றி விட்டு விடவேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்கிறார்கள்.