நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஏற்கனவே டார்ச் சின்னம் இருந்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ம.நீ.ம வேட்பாளர்கள் டார்ச் சின்னத்தில்தான் போட்டியிட்டனர்.
வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து ம.நீ.ம நிர்வாகி ஒருவர் கோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ம.நீ.ம கட்சிக்கு டார்ச் சின்னம் ஒதுக்கியுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.