நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், தனி நபர் தகவல்களை வர்த்தக லாபத்துக்காக பயன்படுத்துவதாகவும் எழுந்த புகாரை அடுத்து சீனாவின் டிக்டாக், விசாட், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் போன் ஆப்-களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. தடைக்கு பிறகு அந்த நிறுவனங்கள் விளக்கம் அளித்தன. அது திருப்தி அளிக்காததால் 59 செயலிகளுக்கும் மத்திய அரசு நிரந்தர தடை விதித்தது. இதையடுத்து டிக்டாக், ஹலோ ஆப்களுக்கான இந்திய பிரிவு மூடப்படுவதாக சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிக்டாக் சர்வதேச பிரிவின் தலைவர் வனேசா பப்பாஸ் ஊழியர்களுக்கு அனுபிய மின்னஞ்சலில், “நமது நிறுவனத்தின் இந்திய பிரிவைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோரை நீக்க முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு மூன்று மாத ஊதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும். மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும், சட்டம், நிர்வாகம், மனித வளம், கணக்கு உள்ளிட்ட பிரிவுகள் மட்டும் குறைவான ஊழியர்களுடன் நிறுவனம் இயங்கும். இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட உறுதி அளித்திருப்பதால் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என அந்த மெயிலில் கூறப்பட்டுள்ளது.