திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா பேட்டையில் வசித்து வருபவர் அப்பாவு. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான அப்பாவு தனது பழைய வீடு பழுதடைந்துள்ளதால் அவரது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று குளிப்பதற்காக அப்பாவு தனது பழைய வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ஒரு நபர் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்ததை அப்பாவு பார்த்துள்ளார். தூங்கிக்கொண்டிருப்பது திருடன் தான் என்று முடிவுசெய்த அப்பாவு, வீட்டை வெளியே இருந்து பூட்டிவிட்டு, தா பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதற்கிடையே அப்பாவு வீட்டில் திருட வந்த திருடன் தூங்கி கொண்டிருப்பதாக ஊர் முழுவதும் தகவல் பரவி ஊர் மக்கள் திருடனை சிறப்பான முறையில கவனிப்பதற்காக வீட்டின் முன்னே கூடியுள்ளனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று உரங்கிக்கொண்டிருந்த திருடனை தட்டி எழுப்பியுள்ளனர். அவர் எழும்பாததால் சோதித்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்துள்ளது. விசாரணையில் இறந்த நிலையில் கிடந்தது திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் (71) என்பதும் அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. ஸ்ரீனிவாசனின் உடலை பிரதே பரிசோதனைக்காக அனுப்பிய தா பேட்டை காவல்துறையினர், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.