மாநில வருவாய் துறை அமைச்சரும் ஜெ பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி உதயகுமார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி குன்னத்தூர் அருகே கோவில் கட்டி வருகிறார்.
இந்த கோவிலில் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. மேலும் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் அதற்குரிய ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டு வருகிறது, என்று கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடைந்ததும் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். 21 படிக்கட்டுகளுடன் மக்கள் அமரும் மண்டபமும் இந்த கோவிலில் அமைக்கப்படுகிறது. மக்கள் நலனே தன் நலன் என ஒரு தியாக தீபமாக மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1.5 கோடி அதிமுக தொண்டர்களின் நெஞ்சங்களில் குல தெய்வமாக வாழ்ந்து வருகிறார். எங்கள் குடும்பத்தினரும் அவரை குலதெய்வகாக வழிபட்டு வருகிறோம். அதனால் தான் இந்த கோயிலைக் கட்டுகிறேன். என அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரின் தந்தை போஸ் தாயார் மீனாள் ஆகியோரும் அமைச்சருடன் ஜெயலலிதா கோயில் கட்டுமானப் பணியின் ஆய்வில் பங்கேற்றனர்