தமிழகத்தில் 16வது சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதன் காரணமாக இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் இன்று முதல் இருநாள்கள் முகாமிட்டு ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரதானச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான குழு இதற்காக சென்னை வருகிறது.
இந்தக்குழுவின் சார்பில் முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட், தேசிய வாத காங்கிரஸ், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் பங்குகொள்கின்றனர். தொடர்ந்து இன்று மதியமே தேர்தல் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.பிக்களிடம் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகின்றனர். அதேபோல் வருமானவரித்துறை அதிகாரிகளிடமும் கலந்துரையாடல் செய்கின்றனர். இதனிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சிறப்பாக நடத்தும்வகையில் மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல்துறையைப் பலப்படுத்தும்வகையில் ஆயுதப்படைக்கு கூடுதல் வலுசேர்க்கும்வகையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இருந்து 5004 காவலர்களைப் பணியிட மாற்றம்செய்து காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.