காங்கிரஸ் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
ராகுல் காந்தி உடனே ஜெயிலுக்கு போக வாய்ப்பு இல்லை. அவருக்கு மேல்முறையீடு செய்ய நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கில் மேல்முறையீடு செய்து குஜராத் உயர் நீதிமன்றம் , உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம். பெரும்பாலும் மேல் கோர்ட்டில் இந்த தீர்ப்பு நிற்க வாய்ப்பு இல்லை. அதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கம் மீண்டும் திரும்ப பெறப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருவேளை இதில் ராகுல் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் சிக்கல் ஆகும்.
ராகுல் காந்தி மட்டும் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் ராகுலின் தகுதி நீக்கம் செல்லுபடி ஆகும். தற்போது இந்த தீர்ப்பு, தகுதி நீக்கம், 2 வருட ஜெயில் எல்லாம் ராகுலுக்கு மிகப்பெரிய அரசியல் இமேஜ் ஒன்றை கொடுத்து உள்ளது. முக்கியமாக வடஇந்தியாவில் இவர் மீதான பார்வை மாற தொடங்கி உள்ளது, அப்படி இருக்க.. சிறையை எதிர்க்கொண்டு.. இன்னும் வலிமையோடு வெளியே வர ராகுல் காந்தி நினைக்கலாம். இந்த தண்டனை தனக்கு சாதகமாக மாறும் என்றும், அரசியல் ரீதியாக தனக்கு இது உதவும் என்றும் ராகுல் காந்தி நினைக்கலாம். அப்படி நினைத்து மேல்முறையீடு செய்யாமல் கூட ராகுல் காந்தி இருக்க வாய்ப்புகள் உள்ளன.
ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூட பரூக் அப்துல்லா கூறி இருந்தார். இதற்கான திட்டங்களை திமுகவும் வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. 2024ல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில்.. முக்கியமாக ராகுல் காந்தி இல்லாத பட்சத்தில் காங்கிரசை பல்வேறு கட்சிகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. உதாரணமாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ் போன்றவை காங்கிரசை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் போது இந்த கட்சிகளுக்கு நட்பாக இருக்கும் ஒருவர்தான் பிரதமர் ஆக முடியும். அதாவது தொங்கு நாடாளுமன்றம் உருவானால், எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆட்சி அமைக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒருவர் பிரதமராக வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்டாலினை தேசிய அளவில் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.