ஆளுநர் இல்லத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று (22 டிசம்பர்) ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய ஸ்டாலின், 2011 முதல் 2016 வரை இருந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அட்சியில் 4 வருடங்களில் எல்லா துறைகளிலுமே ஊழல் புறையோடி போயுள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்களை திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலை துறையில் நடைபெற்றுள்ள ஊழல், மத்திய அரசு வழங்கிய அரிசியை வெளி சந்தையில் விற்றதில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த ஊழல் இவை குறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். அதே போல் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக புகார் அளித்தும். நடவடிக்கை இல்லை. மேலும் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார், உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே இந்த புகார் தொடர்பான ஆதாரங்களை திரட்டி இன்று ஆளுநரிடம் சமர்பித்துள்ளோம். துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்றார் அவர்.