பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராகியுள்ளார் ராஜமௌலி. இதில் ஆர்.ஆர்.ஆர் படம் 95வது ஆஸ்கர் விருது நிகழ்வில் தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் போட்டியிட படக்குழு சார்பாக அனுப்பப்பட்டது. அதில் சிறந்த பாடல் [Music (Original Song)] பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் நாமினேஷனுக்கான முந்தைய இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் ராஜமௌலி. இப்படத்தின் கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படம் பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகிறது.
இந்த நிலையில் ராஜமௌலி மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவரும் சமீபத்தில் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் உலக அளவில் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளார். ராஜமௌலியும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் உலக சினிமா அரங்கில் பாராட்டை பெற்றுள்ளார். உலக அளவில் கவனம் பெற்ற இருவரும் ஒரு படத்தில் இணைந்தால் அப்படம் மிகப் பெரிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இருவரும் ஒரு படத்தில் இணைவார்களா என்றும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.