பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 4.48 மணிக்கு திறக்கப்பட்டது. ரெங்கா ரெங்கா என குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் வைபவத்தையொட்டி பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
வைகுண்ட ஏகாதசியான அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு, அதிகாலை 4.48 மணிக்கு நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது நேற்று இரவே கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர்.