ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தை சேர்ந்த குருத்வாராவில் தலைமை மத குருவாக இருப்பவர் 65 வயது நிரம்பிய பாபா ராம் சிங். அந்த பகுதியில் மிகவும் பிரபலமான இவரை அதிக எண்ணிக்கையிலான மக்கள் பின்பற்றி வந்தனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை எதிர்த்து புதுதில்லியில் 21 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்ட களங்களுக்கு தினமும் சென்று வருவதை இவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் தில்லி -சோனிபேட் எல்லையில் உள்ள ஒரு இடத்தில் இவர் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
”கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் அமர்ந்து தங்கள் உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளின் வேதனையை நான் உணர்கிறேன். அவர்களின் வலியை நான் பங்கிட்டுக் கொள்கிறேன் ஏனென்றால் அரசு அவர்களுக்கு நீதி வழங்கவில்லை. அநீதி செய்வது பாவம். அநீதியை பொருத்துக் கொள்வதும் அதைவிட பாவம். விவசாயிகளின் போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிலர் தங்களது பதக்கங்களை திரும்பளித்துள்ளனர். போராடும் விவசாயிகளுக்காக நான் என்னையே தியாகம் செய்ய தீர்மானித்துள்ளேன்”, என அவர் தனது தற்கொலை குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
பாபா ராம் சிங் தனது காரில் இருந்தபடி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாபா ராம் சிங் கின் இறப்புக்கு தனது இரங்கலை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.