சொத்துகுவிப்பு வழக்கில் சிறைசிறை தண்டனை பெற்று வரும் சசிகலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் உடல்நலக்குறைவு காரணமாக சசிகலா வரும் 27-ம் தேதி சிறையில் இருந்து ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்றும். ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சசிகலா திட்டமிட்டபடி நாளை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது. இன்று குடியரசு தினவிழா விடுமுறை நாள் என்பதால் சசிகலா விடுதலை தொடர்பாக ஆவணப் பணிகள் நேற்றே முடிக்கப்படுவதாக கர்நாடகா சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 விடுதலை ஆகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.