சொத்து குவிப்பு வழக்கில் தண்டைனை பெற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனைக் காலம் 2021 பிப்ரவரி யுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்புள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.
சசிகலா விசாரணை கைதியாக இருந்த நாட்கள் மற்றும் பரோலில் சென்ற நாட்கள் ஆகியவற்றை கழித்து உத்தேசமாக அவர் 2021 ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாக வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டால் அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கர்நாடக மாநிலத்துக்குள் வரக்கூடும். கொரோனா தொற்று காலத்தில் இது மிகப்பெரிய சிக்கலையும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்தும் எனக் கூறி கர்நாடக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சசிகலாவின் விடுதலையின் போது அவரை வரவேற்க வரும் அவரது ஆதரவாளர்களை கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய விடாமல் அவர்களை தமிழக எல்லையிலேயே தடுத்து விட வேண்டும் எனவும் கர்நாடக உள்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சசிகலா தரப்பில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது. அதேநேரம் சசிகலா விரைவில் வெளியாக வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரமும் இருப்பதால் இப்போதைக்கு விரைவில் வெளிவர வாய்ப்பு இல்லையாம். இந்த மாறுபட்ட கருத்துக்களால் சசிகலா ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.