தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த 2-ம் தேதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரசியலில் குதிப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதற்கு சகாயம் ஐ.ஏ.எஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்து அரசு பேசவில்லை. நான் அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி பிறந்த நாளில் விருப்ப ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பித்தேன். அப்போது தமிழக அரசிடம் நான் ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். ஜனவரி 31-ம் தேதி காந்தி மறைந்த தினத்தில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. அந்த கோரிக்கையை கூட தமிழக அரசு நிராகரித்துவிட்டு, அதற்கு முன்னதாகவே விடுவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்-ல் சம்பாதிக்க நினைப்பவர்கள், மக்களுக்கு சேவையாற்ற நினைப்பவர்கள் என இரண்டு ரகம் உண்டு. நான் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். ஆனால் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புள்ள துறைகள் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒதுக்கப்படவில்லை. பணி ஓய்வுக்கு பிறகு அரசியலில் நுழையும் திட்டம் எதுவும் இல்லை. சமூக பணியாற்றவும், ஊழலுக்கு எதிராகவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட திட்டமிட்டுள்ளேன்.” என்றார்.