நேரடியாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய தனது உடல்நிலை இடமளிக்காது என்ற காரணத்தால் தன்னால் அரசியலுக்கு வரமுடியவில்லை என ரஜினி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரியில் கட்சி தொடங்குவதாக கூறி மருத்துவர்களின் அறிவுரைகளையும் மீறி ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துக் கொண்டேன். கோவிட் -19 க்கான கட்டுப்பாடுகளுடன் மிக ஜாக்கிரதையாக 120 பேர் மட்டும் கலந்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தி வந்தோம். இருந்த போதிலும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட 4 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தினோம். கரோனா பரிசோதனையில் எனக்கு நெகட்டிவ் என்று வந்த போதிலும் எனது ரத்த கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு வந்தது. எனது ரத்த கொதிப்பில் ஏற்றதாழ்வு வந்தால் அது எனது மாற்று சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால் மருத்துவர்களின் அலோசனைப்படி மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்டது.
இதை எனக்கு ஆண்டவன் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகதான் பார்க்கிறேன்.
நான் கட்சி ஆரம்பித்த பிறகு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. ஒருவேளை நான் கட்சி ஆரம்பித்தால் பிரச்சாரத்துக்கு சென்று லட்ச கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் கரோனா இப்போது உருமாறி இரண்டாம் அலையாக வந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிரச்சாரத்தின் போது எனது உடல்நிலை பாதிக்கப்பட்டால் என்னை நம்பி வந்தவர்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். ஆகையால் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஜினி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தி ஆகியோருக்கு தனது நன்றியை அந்த அறிக்கையில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்ததால் தன்னை மன்னித்துக் கொள்ளும்படியும் ரஜினி தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல் செயல்படும் என்றும் தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்ன சேவை செய்யமுடியுமோ அதை தான் செய்வதாகவும் ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு அல்வா..
ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த 25 ஆண்டுகளாகவே தன் ரசிகர்களிடம் கூறிவருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பித்த போது அவர் கட்சி தொடங்குவார் என நம்பி பல்வேறு கட்சியில் இருந்தவர்களும் ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைந்தனர். 1995 ஆம் ஆண்டு பாட்ஷா படம் வெளியான காலம் தொட்டே ரஜினி அரசியலுக்கு வருவதாக வாக்குறுதிகளை அவ்வப்போது கொடுத்துவந்தார். இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு, ரஜினி வரும் 31ம் தேதி கட்சியின் பெயரை அறிவிப்பதாகச் சொன்னார். ஆனால் அதற்கு இருநாள்களுக்கு முன்பே தான் கட்சி தொடங்கவில்லை என அறிவித்து கடந்த 25 ஆண்டுகளாகவே கொடுத்துவரும் அல்வாவை 2020 ஆண்டின் இறுதியிலும் பந்தி வைத்திருக்கிறார் ரஜினி.