உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். இந்த நிலையில் ரஜினி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு….
நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்ற காரணத்தை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன் தயவுகூர்ந்து இதற்குப் பிறகு நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.