தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசுகையில், “இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் மோடி தனக்கு விரிந்த மார்பு இருப்பதாக கூறி பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் இன்று சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அமர்ந்திருக்கிறது. ஆயிரம் கிலோ மீட்டர் இந்திய எல்லையை சீனா கைப்பற்றியுள்ளது.
சீனா என்ற வார்த்தையைக்கூட சொல்லமுடியாதவராக, தைரியமற்றவராக பிரதமர் மோடி இருக்கிறார். கடந்த நான்கு மாதங்களாக சீனா என்ற வார்த்தையை அவர் எங்கும் உச்சரித்ததே கிடையாது. சீனா இந்தியாவில் நுழைந்தபோது அப்படியாரும் வரவில்லை என மோடி பொய் சொன்னார். சில நாட்களுக்கு பிறகு சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் இருப்பதை இந்திய ராணுவ அமைச்சரும், இந்திய ராணுவமும் ஒப்புக்கொண்டார்கள். மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியதாலும், மக்களை பிரித்தாழ்வதாலும்தான் சீன ராணுவத்திற்கு இந்தியாவிற்குள் நுழைவதற்கான தைரியம் வந்தது” என்றார்.