தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தனியார் மூலம் ஒப்பந்த ஊழியர்களை நிரப்புவது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தனியார் மூலம் பணிநியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்வாரியத்தில் உள்ள கேங்மேன் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்புவது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை தொழிற்சங்கங்கள் வாபஸ் பெற்றால் ஒரு வாரத்தில் மின்வாரியத்தில் 10 ஆயிரம் பேர் பணி நியமிக்கப் படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். போராட்டங்களை கைவிட்டு தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டார்.