யார் போராடினாலும் வேளாண் சட்டங்கள் தொடர்ந்து நீடிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்க கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கலந்து கொண்டு பேசும்போது, ‘2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின் அடிப்படையில்தான் புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அதை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப்பைத் தவிர பிறமாநிலங்கள் வேளாண் சட்டத்தை ஆதரிக்கின்றன.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியபோதும், விவசாயிகள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்போது விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் தலா 2000 வீதம் 18 ஆயிரம் கோடி நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்காக 43 ஆயிரம் கோடி வங்கிக்கு கொடுத்தது. ஆனால் பி.ஜே.பி அரசு 1,20,000 கோடியை நேரடியாக விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. திமுக, காங்கிரஸ் என யார் போராடினாலும் வேளாண் சட்டங்கள் நீடிக்கும்.’’என்றார் அவர்.