கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமூகத்தை சேர்ந்த 17 பேர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. கொத்தடிமைக்கு எதிராக சட்டம் இயற்றி ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆகியுள்ள நிலையில் தற்போதும் கொத்தடிமை முறை நீடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் தொடங்கிய காலத்திலிருந்தே அடிமை முறை தொடங்கி விட்டது. மேலை நாடுகளில் நிற ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவை பொறுத்த அளவில் அடிமை முறையானது சாதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகும். பழங்குடியின, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.
வாழ்வாதாரத்திற்கு எந்த உதவியும் அரசு செய்யாதபோது இம்மக்கள் தன்முனைப்பாக வாழ தொடங்குகின்றனர். அப்படி இருக்கையில் எதிர்வரும் சாவல்களை சந்திக்க பொருளாதாரம் மிகவும் அவசியமானதாகும். ஆனால் இம்மக்களிடம் எதுவும் இல்லாததால் பொருளாதாரத்தை உருவாக்க முடியவில்லை. எனவே தங்களையோ அல்லாது தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரையோ அடமானமாக வைத்து அதற்கு உரிய பணத்தை பெற்று இவர்கள் வாழ தொடங்குகின்றனர். இப்படி அடமானமாக வைக்கப்பட்டவர்தான் கொத்தடிமையாக மாற்றப்படுகிறார்.