நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் துவங்குவதாக இருந்தது. இந்நிலையில் வரும் 16 ஆம் தேதி முதல் கரோனா ஒழிப்பில் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்க இருப்பதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்தன் வரும் 17 ஆம் தேதியில் இருந்து மூன்று நாள்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார். ஆனால் கரோனா தடுப்பூசி பணியும் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு பணிகளையும் செய்ய முடியாது என்பதால் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டுமருந்து தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 8 லட்சம் குழந்தைகளுக்கு வினியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.