வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் மீது வழக்குகள் பதிவாகியிருக்கின்றதா என்று மட்டும் காவல்துறை இதுவரை விசாரணை நடத்தி வந்தது. அப்படி வழக்குகள் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும் வந்தது. இந்த நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்ப்பதாரர்களின் ஆன்லைன் நடவடிக்கைகளையும் கண்காணித்து அதற்கேற்ப ரிப்போர்ட் வழங்குவது என உத்தரகாண்ட் காவல் துறை முடிவு செய்திருக்கிறது. இதன் அடிப்படையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை காவல் துறை ஆராயும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரகாண்ட் டி.ஜி.பி. அசோக் குமார் கூறுகையில், “ஊடகங்களை தவறாக பயன்படுத்துவது இப்போது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டுமானால் விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் நடத்தைகள் ஆராயப்பட வேண்டும். நாங்கள் புதிதாக எதையும் அறிமுகப்படுத்தவில்லை. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு பாஸ்போர்ட் தரக்கூடாது என ஏற்கனவே விதிமுறை உள்ளது. அதற்கு ஆதரவாக மட்டுமே அதிகாரிகள் கூட்டத்தில் பேசியுள்ளேன். அரசியல் அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ள தேச விரோத நடவடிக்கைகளுக்கு ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் எதிராக நிற்கிறேன். சமூக ஊடகங்களின் பெருகி வரும் தவறான நடத்தைகளை தடுக்கும் விதமாகவும், ஆன்லைன் பயன்படுத்துபவர்கள் தகவல்களை அனுப்பும் போது அதிக பொறுப்புடன் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவும்” என்றார்.