திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.
அவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “தேர்தல் ஆணையத்தின் மரியாதை சேஷனால் உயர்ந்தது. அதுபோல சட்டப் பேரவை தலைவரின் வானளாவிய அதிகாரத்தை பி.எச். பாண்டியனால் மக்கள் தெரிந்து கொண்டனர். கட்சியிலும், ஆட்சி மற்றும் சமூகப் பணியிலும் உத்வேகத்துடன் செயல்பட்டவர் பி.எச்.பாண்டியன். திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி பச்சையாறு திட்டம், கொடுமுடியாறு திட்டம் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தில் வாதாடி அனுமதி பெற்றுத்தந்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரிக்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை வழங்கினார். திருநெல்வேலி மண்ணுக்கான வீரம் மற்றும் அன்பு அவரிடம் இருந்தது. அசாத்திய துணிச்சலுடன் செயல்பட்டார் பி.எச்.பாண்டியன். அவரைப்போல் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்” என்றார்.