பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப் பெற்றவர்களுக்கு அகில பாரத இந்து மகா சபாவின் விவசாய அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. அதிலும் இயற்கை விவசாயி, மறைந்த மக்களின் மருத்துவர் உள்ளிட்டோருக்கும் விருது வழங்கியிருப்பது எளிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் எனவும் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.
அகிலபாரத இந்துமகா சபாவின் விவசாய அணி மாநிலத் தலைவர் மாணிக்கம் விடுத்துள்ள அறிக்கையில், பத்ம விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நாட்டின் மிக உயரிய விருதுகளாகும். 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது அறிவிக்கப்படுகின்றன.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வா்த்தகம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனை அல்லது சேவை புரிந்தவா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தை சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாள், சமூக சேகர் சுப்புராமன், ஸ்ரீதர் வேம்பு, மருத்துவர் மறைந்த திருவேங்கட வீரராகவன் உள்ளிட்ட 40 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பிரிவில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதினைப் பெற்ற சான்றோர்கள் அனைவருக்கும் அகில பாரத இந்து மகா சபாவின் விவசாயப் பிரிவு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
பாப்பம்மாள் பாட்டி 103 வயதிலும் இயற்கை விவசாயம் செய்து உழவுக்கு உரமூட்டுபவர். அடுத்த தலைமுறை விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரமான பாப்பம்மாள் பாட்டிக்கு கிடைத்திருக்கும் விருது, தமிழக விவசாயிகள் அனைவருக்கும் சூட்டிய மணிமகுடம். அதேபோல் சென்னை வியாசர்பாடியில் வெறும் 5 ரூபாய்க்கு மக்களுக்கு சிகிட்சையளித்த மக்கள் மருத்துவர் மறைந்த திருவேங்கடத்துக்கும் விருது அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
5 ரூபாய் டாக்டர் என மக்களால் புகழப்பட்ட மருத்துவர் திருவேங்கடம், அரசு மருத்துவக்கல்லூரியில் கட்டணம் இன்றி பயின்றவர். அதேபோல் தனது சேவையும் இருக்க வேண்டும் என வியாசர்பாடி, எருக்கச்சேரி மக்களுக்கு 5 ரூபாயிலேயே மருத்துவம் பார்த்தவர். அவருக்கு இப்போது கிடைத்திருக்கும் விருது அவர் வாழ்நாள் பணிக்குக் கிடைத்த நல்லதொரு அங்கீகாரம். விருதுபெற்ற அனைவரையும் அகில பாரத இந்துமகா சபாவின் விவசாயப்பிரிவு சார்பில் வாழ்த்துகிறோம்.’’இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.