திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவருக்கு வேத விற்பணர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேள் பரிசாக அளித்தனர். இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தன் பகுத்தறிவுப் பாதையில் இருந்து நகர்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டை சந்தித்துவருகிறது.
இதுகுறித்து பா.ஜ.க தலைவர் முருகன் கூறுகையில், “ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் பா.ஜ.க வின் வெற்றி வேல் யாத்திரையை குறை கூறினார்கள். வேல் எடுத்து அரசியல் செய்கிறார் என கிண்டல் செய்தனர். ஆனால் இன்று தை கிருத்திகை நாளில் பா.ஜ.க எங்கு வேல் எடுத்ததோ அதே இடத்தில் கையில் வேல் எடுக்க வைத்துள்ளார் முருக கடவுள். கோவிலுக்கு போகமாட்டோம் என சொன்னவர்களிடம் ஒரே மாதத்தில் எவ்வளவு பெரிய மாற்றம். திமுக-வை வரும் இந்த சட்டசபைத் தேர்தலில் அரசியலை விட்டே விரட்டியடிப்போம்” என்றார்