மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டதிருத்தங்களையும் திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பகுதி, பகுதியாக உண்ணாவிரதமும் இருந்துவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை தொடர விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுவரை நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாத நிலையில், விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கிலேயே தலா 2 ஆயிரம் வீதம், 18 ஆயிரம் கோடி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் விவசாயிகளிடம் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் இதை தெரிவித்தார். மேலும் அவர், ‘மத்திய அரசு புதிதாக இயற்றிய சட்டத்துக்கு பல மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றியே அதற்கு சாட்சி. தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர். துவக்கத்தில் குறைந்தபட்ச ஆதரவுவிலை உள்ளிட்ட நியாயமாம கோரிக்கைகளையே விவசாயிகள் முன்மொழிந்தனர்.
ஒருகட்டத்தில் அந்தப்போராட்டத்தில் எதிர்கட்சிகள் புகுந்து, தொடர்பில்லாத கோரிக்கைகளை வைக்கத் துவங்கினர். நாட்டில் வன்முறை செய்ததாக சிறையில் இருப்போரை விடுவிக்கவேண்டும், சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுப்புகின்றனர். விவசாயிகளைத் தவறான நோக்கங்களுக்காக எதிர்கட்சிகள் வழிநடத்துகின்றன.’’என்றார் அவர்.