புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைவதற்காக தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம் என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்நிதியத்திற்கு முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இதையும் படியுங்கள்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு இத்திட்டத்தில் பயன்பெற கடந்த மே 2022-லிருந்து தொழில்முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை 330 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பித்தவர்களில் இருந்து, தொழில்முனைவு வழிகாட்டுநர்கள், அரசு அலுவலர்கள், முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய தகுதியான நடுவர் குழு அமைக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியான 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு மொத்தம் 7.50 கோடி ரூபாய் பங்கு முதலீடு செய்வதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த தொழில் நிறுவனங்களில் அரசே முதலீடு செய்வதன் வாயிலாக இந்நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் பெருகும்.