நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசிபோடும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான வதந்திகளால், பல பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் மத்தியில் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை 9 மணிக்கு கோவிட் தடுப்பூசியை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் போட்டுக் கொள்கிறேன். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என மருத்துவத் துறையில் பணியாற்றும் முன் களப்பணியாளர்கள் இடையே நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் ஒரு மருத்துவர் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் இதைச் செய்கிறேன். கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு கோவிட்-19 தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என அறிக்கையில் கூறியுள்ளார்