கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீடு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது. ஆனால் இடஒதுக்கீடு விவகாரத்தி தெளிவான நிலைப்பாடு இல்லாத பாஜக கட்சி கதிகலங்கிக் கொண்டிருக்கிறதாம்.
கர்நாடகாவில் சமூக நீதி, இடஒதுக்கீடு குரல்கள், தேர்தல் களத்தில் உரத்து கேட்கின்றன. கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; அதன் விவரங்களை மத்திய பாஜக அரசு ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்திருந்தார்.
தற்போது கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அனைவருமே இடஒதுக்கீடு, சமூக நீதி பிரச்சனையை பேசி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் 75% இடஒதுக்கீடு விவகாரம், கர்நாடகாவில் பாஜக வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது என்றே கூறப்படுகிறது.
கர்நாடகாவில் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்குமான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும். தகுதி வாய்ந்த அனைத்து ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இடஒதுக்கீடு 50%-க்கும் அதிகமாக போகக் கூடாது என்பது நடைமுறை. இதனை மாற்றி அனைத்து ஜாதியினருக்குமான இடஒதுக்கீடு அளவை 75% ஆக உயர்த்துவோம் என சித்தராமையா கூறியுள்ளார். ஆனால் மத்திய அமைச்சரான பாஜகவின் ஷோபா கரந்த்லாஜே, சித்தராமையாவின் இந்த வாக்குறுதியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா கூறுகையில், நாட்டில் இடஒதுக்கீடு அளவு 50% என உள்ளது. அதெப்படி சித்தராமையாவால் மட்டும் 75% இடஒதுக்கீடு என உறுதி அளிக்க முடியும்? கர்நாடகா மாநில மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறா சித்தராமையா. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் சித்தராமையாவும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார் என்றார்.