கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் தற்போதைய இடஒதுக்கீடு அளவு 75% ஆக உயர்த்தப்படும் என்றும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவும் தமிழ்நாட்டைப் போல இடஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் உணர்வுப்பூர்மானது. கர்நாடகாவில் லிங்காயத்துகள் 16%-17% ; ஒக்கலிகா கவுடாக்கள் 12-14% உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் 60% பேர் உள்ளனர். வட, மத்திய கர்நாடகாவில் லிங்காயத்துகள் பெரும்பான்மையினர். கடலோர கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள் அதிகம். தென் கர்நாடகாவில் ஒக்கலிகா கவுடாக்கள் பெரும்பான்மையினர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர், முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு பறித்தது. இதனை லிங்காயத், ஒக்கலிகா ஜாதிகளுக்கு சம பங்காக பகிர்ந்தளித்தது. இது கர்நாடகா தேர்தல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக ஏற்கனவே எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அதிகரித்தது. ஆனால் இது உச்சநீதிமன்றம் வரையறைத்த 50% இடஒதுக்கீட்டை மீறியதாக இருந்தது. இன்னொரு பக்கம் இதர பிற்படுத்தப்பட்டோரும் கூடுதல் இடஒதுக்கீடு கோரினர். இவை மட்டுமின்றி உள் இடஒதுக்கீடு விவகாரங்களும் கர்நாடகா அரசியலில் பெரும் தலையிடியாக உள்ளன. இந்த பின்னணியில்தான் தற்போது இடஒதுக்கீடு அளவை 75% ஆக உயர்த்துவோம் என வாக்குறுதி தந்துள்ளது. தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற வரையறையை மீறி 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.