கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜக சீட் மறுத்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து அவர் தேர்தலை எதிர்கொண்ட நிலையில் படுதோல்வியடைந்தார். இருப்பினும் ஜெகதீஷ் ஷெட்டரால் காங்கிரஸ் மத்திய மற்றும் மும்பை கர்நாடகாவில் ஏராளமான தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் அவருக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பொறுப்பு வழங்கலாம் எனவும், இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி பெரிய திட்டத்தை வைத்துள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. பாஜக மொத்தம் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகும் கனவில் இருந்த குமாரசாமிக்கும் இந்த தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வாகை சூடியது.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஒரு பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவருக்கு பதவி வழங்குவதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத் சமுதாயத்தினரின் ஓட்டுகள் கூடுதலாக கிடைக்கலாம் என காங்கிரஸ் நம்புகிறது. இந்நிலையில் தான் அவருக்கு துணை முதல்வர், அமைச்சர் பதவி வழங்கலாம் என்ற தகவல் பரவுகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தார்வார் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து அவரை களமிறக்கவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பொறுப்புகளை ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அவர் முதல்வராக இருந்தவர். இத்தகைய சூழலில் அதனை விட அதிகாரம் குறைந்த துணை முதல்வர், அமைச்சர் பதவியை அவர் ஏற்பாரா? அல்லது நிராகரிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.