மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலம் முழுவது தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் வந்த கமல்ஹாசன் கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது மூன்றாவது அணி தமிழகத்தில் அமையுமா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் அமையும் என பதிலளித்தார். கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரையும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தோற்கடிக்க யாரோ இறக்கியுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, மக்கள் தான் என்னை கொண்டு வந்துள்ளனர், வேறு யாரும் என்னை வெளியிலிருந்து பொம்மலாட்டம் ஆட வைக்க முடியாது. நான் ஒன்றும் தலையாட்டும் பொம்மை அல்ல என கூறினார்.
மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத்துக்கு உள்ள எழுச்சி குறித்த கேள்விக்கு, இது வரை இதுபோன்ற ஒரு எழுச்சியை நான் பார்த்து ரெம்ப காலமாகிவிட்டது எனக் கூறினார்.
முன்னதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றும் போது மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளை நரகங்களாக மாற்றி வைத்துள்ளனர். இவர்கள் மனித உயிர் பற்றிய மதிப்பு இல்லாதவர்கள் என குற்றம்சாட்டினார். மேலும் தான் வெறும் நட்சத்திரம் இல்லை என்றும் மக்களின் வீடுகளில் எரியப்போகும் விளக்கு என்றும் கூறினார்.