தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்
தமிழக சட்டசபை தேர்தல் 2021 ஆண்டு நடைபெற உள்ள நிலையில் திரைப்பட நடிகர் ரஜினி தனது கட்சியை 2021 ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை 2021 ஜனவரி முதல் தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் மாவட்டம் வாரியாக சென்று மக்களை சந்தித்து தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். இந்நிலையில் தமிழக முதல்வரும் தனது பிரச்சாரத்தை தொடங்கியதை அடுத்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது
.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய சோரகையில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி தொகுதியை பொறுத்தவரை அதிமுக ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் நான்கு முறை முதல்வர் பழனிசாமி வென்றுள்ளார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரையை விட 42,000 வாக்குகள் அதிகம் பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரானார்.
ஆனால் நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்தார். முதல்வரின் சொந்த தொகுதியான எடப்பாடியிலும், அவரது சொந்த ஊரான சிலிவம்பாளையத்திலும் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் இரு பெரும் அரசியல் ஆளுமைகளான கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த பின்னர் நடைபெறுகின்ற முதல் சட்டசபை தேர்தல் என்பதால் இந்த தேர்தல் மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.