ரயில் பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான பணத்தை திரும்ப செலுத்துவதற்கு என்ற போர்வையில் உங்கள் வங்கி தகவல்களை கேட்கும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்த ரயில் பயணச்சீட்டுக்கான கட்டணத்தை திரும்ப செலுத்த ரயில்வே நிர்வாகம் பயணிகளிடம் ஒருபோதும் அவர்களது வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை கேட்பதில்லை. ஆனால் சில மோசடி கும்பல்கள் ரயில்வே அதிகாரிகள் என கூறிக் கொண்டு பயணிகளிடம் அவர்களது வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை கேட்பதாக ரயில்வே துறைக்கு புகார்கள் வந்துள்ளது. எனவே ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் இந்த மோசடி கும்பல்களிடம் தங்களது வங்கி கணக்கு தொடர்பான விவரங்களான டெபிட்/கிரடெடிட் அட்டை எண்கள், சிவிவி எண், ஒடிபி, ஏடிஎம் பின் எண், பான் எண், பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து ஏமாற வேண்டாம் என தென்னக ரயில்வே ஒரு செய்தி குறிப்பு மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய ரயில்வே அல்லது ரயில்வே அதிகாரிகள் ஒரு போதும் தனிநபர்களின் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து விட்டு அது ரத்து செய்யப்பட்டால் அதற்கான கட்டணத் தொகை, பயணச்சீட்டு முன்பதிவு செய்த அதே வங்கி கணக்கிலேயே நேரடியாக தானாகவே வரவு வைக்கப்படும்.
மேலும் ரயில் நிலையங்களில் எடுக்கப்பட்ட பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டால் அதற்கான தொகையும் ரயில் நிலையங்களிலேயே குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி கொடுக்கும் போது திரும்ப வழங்கப்படுகிறது.
இது போன்று வங்கி தகவல்களை கேட்கும் மோசடி அழைப்புகள் உங்களுக்கு வந்தால் பொதுமக்கள் 138 என்ற பயணியர் உதவி தொலைபேசி எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் கேடுக்கொண்டுள்ளது.