சூரிய குடும்பத்தின் மையத்தில் பிரகாச ஒளியுடன் சூரியன் உள்ளது. நட்சத்திரம் வகையை சேர்ந்த அதனை 8 கோள்கள் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இவற்றில், பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆற்றலை சூரியன் வழங்கி வருகிறது. பிற கோள்களில் உயிரினங்கள் வாழ கூடிய அமைப்புகள் காணப்படவில்லை. ஏனெனில், சூரியனின் மிக அருகே உள்ள கோள்கள் அதிக வெப்பநிலையில் உள்ளன. தொலைதூர கோள்கள் சூரியனின் வெப்பம் கிடைக்க பெறாத நிலையில் குளிர்ச்சியுடன் உள்ளன. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6 ஆயிரம் டிகிரி செல்சியசாக உள்ளது. ஆனால், சூரியனின் புறஅடுக்கில் உள்ள கரோனா எனப்படும் கதிர்வீச்சுகள் லட்சக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கொண்டுள்ளது.
இதற்காக தொடர்ச்சியாக கரோனாவை கண்காணிக்கும் பணியில், இந்த வி.எல்.இ.சி. அமைப்பு செயல்படும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இதுபற்றி இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் பேராசிரியர் திவ்யந்து நந்தி கூறும்போது, இந்த அமைப்பை இந்தியா முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் சூரிய இயற்பியலாளர்கள் இணைந்து கடுமையாக பணியாற்றி உருவாக்கி உள்ளனர். இதனால், விண்வெளியில் நிலவும் வானிலை பற்றி சிறந்த முறையில் முன்பே கணிக்க உதவும். அதற்கேற்ப நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள முடியும். ஒருவேளை சூரியனிடம் இருந்து ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு கரோனா கதிர்வீச்சுகள் வெளியேறினால், விண்வெளியில் உள்ள நமது சொத்துக்களை பாதுகாத்து கொள்ள முடியும். அதற்கான கணிப்பை மேற்கொள்ள இந்த கரோனாகிராப் உதவி புரியும் என்று அவர் கூறியுள்ளார்.