அப்படி அனைவரும் எதிர்பார்த்த குருப்பெயர்ச்சி நடந்து முடிந்து விட்டது. குருப் பெயர்ச்சி அன்றோ, குருப்பெயர்ச்சிக்கு பிறகோ, குருவால் தங்கள் ராசிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பரிகாரங்கள் செய்ய முடியாமல் பலரும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் குருவின் அருளை பெறுவதற்கு என்ன பரிகாரம் எளிமையாக செய்து, குருவின் அருளை பெறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
சனிப்பெயர்ச்சி என்றால் எல்லோருக்கும் பயம் தான் வரும். சனியின் இடம் மாற்றத்தால் கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏதாவது வந்து விடுமோ என பயப்படுவார்கள். ஆனால் குருப்பெயர்ச்சியின் போது அந்த பயம் இருக்காது. குரு பார்க்க கோடி நன்மை என்பதால் குருவின் அருட்பார்வை நம்முடைய ராசியின் மீது விழுகாதா, அதனால் வாழ்க்கை நல்ல நிலைக்கு மாறாதா என்ற ஆசையில் காத்திருப்பவர்களே அதிகம்.ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களில் குரு பகவான் என்பவர் மங்களகாரகன் என்றும், சுபகிரகம் என்றும் அழைக்கப்படுபவர். வாழ்க்கையில் சுபிட்சம், மகிழ்ச்சி ஏற்பட வேண்டும், சுப காரியங்கள் தடையின்றி நடப்பதற்கு காரணமானவர் குரு பகவான் தான். இவர் தான் ஞானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் என்பதால் இவரை புத்தி காரகன் என்றும் அழைக்கின்றனர். தோற்ற பொழிவு, உயர்ந்த குணம், ஞானம், உடல் வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமானவர் குரு பகவான் தான்.2023 ம் ஆண்டில் குருப்பெயர்ச்சி நிகழ்வானது ஏப்ரல் 22 ம் தேதி நடைபெற்றது. திருக்கணித பஞ்சாங்கப்படி காலை 05.14 மணிக்கும், வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 11.26 மணிக்கும் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குருவின் இந்த பெயர்ச்சியால் 6 ராசிகள் நன்மை பெற உள்ளதாகவும், 6 ராசியினர் குரு பகவானால் பாதிப்பை எதிர்கொள்ள போவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் 6 ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.