ஆடவருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல் மகளிருக்கு என தனியாக தொடரை நடத்த பிசிசிஐ அண்மையில் முடிவு ஒன்றை அறிவித்தது. இதற்கு மகளிர் பிரிமியர் லீக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐந்து ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல், பெங்களூர் ஆகிய அணிகள் தங்களுடைய மகளிர் அணியை அதை நகரத்தை மையமாக வைத்து வாங்கியது. இதேபோன்று அகமதாபாத் அணியை அதானி நிறுவனம் லக்னோ அணியை காப்ரி குளோபல் என்ற நிறுவனமும் வாங்கியுள்ளது.
இதன் மூலம் பிசிசிஐக்கு 4669 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடர்பான ஏலம் வரும் 13ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஏலத்திற்காக உலகம் முழுவதும் 1525 வீராங்கனைகள் தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இது ஆடவர் ஏலத்தை விட அதிகம் ஆகும். இதில் இறுதிப்பட்டியில் மொத்தம் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் 246 வீராங்கனைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 163 வீராங்கனைகள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆகும்.
இதில் 24 வீராங்கனைகள் தங்களுடைய அதிகபட்ச விலையை ஆக 50 லட்சம் ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். இதில் 14 வெளிநாட்டு வீராங்கனைகளும் 10 இந்திய வீராங்கனைகளும் அடங்கும். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தானா, தீப்தி ஷர்மா, செபாலி வெர்மா போன்ற இந்திய வீராங்கனைகளும், அலிசா ஹெலி, எல்சி பேரி, சோபி எஸ்லெஸ்டோன், சோபி டெவைன் போன்ற வெளிநாட்டு வீராங்கனைகளும் தங்களுடைய விலையை அதிகபட்ச தொகையாக 50 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் ,இலங்கை வங்கதேசம் , அயர்லாந்து , ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், தாய்லாந்து நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வீராங்கனைகள் இறுதிப் போட்டிகளில் இடம் பிடித்திருக்கிறார்கள்.ஐந்து ஐபிஎல் அணிகளும் அதிகபட்சமாக 12 கோடி ரூபாய் வரை வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 15 வீராங்கனைகளை தேர்வு செய்ய வேண்டும். அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இடம் பெறலாம். அந்த கணக்கில் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் ஏலத்தில் தேர்வு செய்யப்படலாம். இதில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வெளிநாட்டு வீராங்கனைகளை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யலாம். இதில் நான்கு வெளிநாட்டு வீராங்கனைகள் டெஸ்ட் அணிகளை சேர்ந்தவர்களாகவும், ஒரு வீராங்கனை அசோசியேட் நேசன் எனப்படும் கத்துக்குட்டி அணிகளை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆடவர் ஐபிஎல் தொடரை போல் மகளிர் பிரீமியர் தொடரிலும் பாகிஸ்தான் வீராங்கனைகள் அனுமதிக்கப்படவில்லை. மகளிர் ஐபிஎல் ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பணியில் இறங்கி இருக்கிறது. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனும் ஆல் ரவுண்டருமான சார்லட் எட்வேர்ட்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் மும்பை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோன்று முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை ராக்கேல் ஹெய்னஸ் அதானியின் குஜராத் ஜெயின்ஸ் அணிக்கு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இதேபோன்று மிதாலி ராஜ் மென்டராக அந்த அணிக்கு பணிபுரிய உள்ளார்.
பெங்களூரு ,டெல்லி மற்றும் லக்னோ அணிகளும் தங்களுடைய பயிற்சியாளர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனிடையே ஐபிஎல் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்காதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள பார்ப்ரோன் மைதானத்திலும், டி ஓய் பட்டேல் மைதானத்திலும் நடைபெறும்.