மத்திய அரசு புதிதாக கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கேட்டு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். டெல்லி முற்றுகை போராட்டத்தால் திணறிய டெல்லிவாசிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் விவசாயிகளுக்கு போராடும் உரிமை இருக்கிறது. மத்திய அரசு வேளாண் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சொல்லுமா? என்றெல்லாம் கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
இன்னொரு புறத்தில் பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதுதான் காரணம் எனச் சொன்னார். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரும்மாறு போராடும் விவசாயிகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் சட்டங்கள் தொடர்பான உறுதியான தீர்வை அளித்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என விவசாயிகள் தீர்க்கமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கூறுகையில், ‘விவசாயிகள் போராட்டம் சட்டவிரோதமானது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டால் எதிர்காலத்தில் அங்கு நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு சட்டத்தையும் திரும்பப் பெறுவதற்கான முன்னுதாரணமாக மாறிவிடும். இது அரசியலமைப்பு சட்டத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் ஆபத்தில் தள்ளும். விவசாயிகள் போராட்டம் எதிர்கட்சிகளின் சதி. விவசாயிகள் மத்திய அரசுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.’எனக் கூறியுள்ளார்.