தமிழகத்தில் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் என்ற முதல்வரின் அறிவிப்பால் விவசாயிகள் குஷி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1984-ம் ஆண்டு அ.தி.மு.க அரசால் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1990-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதி அனைத்து விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தினார். இப்போது தமிழகத்தில் சுமார் 22 லட்சம் விவசாயிகள் இலவச மின்சார திட்டதால் பயன்பெற்று வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் மட்டுமே மூன்று லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கும் புதிய மின் இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அளவிடவே மின் மீட்டர் பொருத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனாலும் விவசாயிகள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அம்மா அவர்களின் அரசு விவசாயிகளுக்கு வழங்கிவந்த இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கும் செய்தியை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.