கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி, கார்வார், பீதர், நிப்பானி உள்ளிட்ட சில பகுதிகளில் மாராத்தி மொழி பேசும் மக்கள் அதிக அளவு உள்ளனர். அந்த பகுதிகள் மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு சொந்தமானது என்றும், அதை தங்கள் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்றும் மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மற்றும் எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதுமட்டுமல்லாது கர்நாடகா பகுதிகளை மஹாராஷ்டிரா ஆக்கிரமிக்க நினைத்தால் ரத்த ஆறு ஓடும் என சில அமைப்புகள் ஆவேசமாயின. இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் மாநிலத்திலிருந்து ஒரு இன்ச் நிலத்தைக் கூட உத்தவ் தாக்கரேயால் எடுக்க முடியாது. எடுக்கவும் விடமாட்டோம். இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரே கூட்டாட்சி முறைக்கு மதிப்பளித்து தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்” என கூறியுள்ளார்