கொரோனா பெரும்தொற்றை கட்டுப்படுத்த ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த இரண்டு மருந்தையும் இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 16-ம் தேதி முதல் இந்த தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் கோவாக்சின் தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு பயன்படுத்த விரும்பவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தேவ் அறிவித்துள்ளார். கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பாக அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அந்த முடிவுகள் குறித்த ஆய்வு நிறைவடைவதற்கு முன்பாக அவசரம் காட்டக் கூடாது. இதை மற்ற நிறுவனங்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கேட்கும் எனவும் டி.எஸ். சிங் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.