தமிழகத்திலேயே முதன்முறையாக, நரிக்குறவர் இன மாணவியருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.. இதனால் பெரம்பலூர் மாவட்டமே பூரித்து கிடக்கிறது!! மத்திய அரசு நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசும் பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு 37-வது பிரிவில் சேர்த்து நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது.
முன்னதாக, நரிக்குறவன், குருவிக்காரன் எனக் குறிப்பிட்டு மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்ட நிலையில், குருவிக்காரர் – நரிக்குறவர் என மாற்றப்பட வேண்டும் என்பதற்காக அரசாணையை வெளியிடாமல் இருந்தது தமிழ்நாடு அரசு.
அதற்கு பிறகு, மாணவர் சேர்க்கை தொடங்க இருந்ததால், அச்சமூகத்தினர் பாதிக்கப்படாது என்பதற்காக அப்போதே அரசாணையை வெளியிட்டு, பிறகு திருத்தப்படும் என்றும் கூறியிருந்தது தமிழ்நாடு அரசு.. அதாவது, இந்த கல்வி ஆண்டிலேயே இப்பிரிவுகளை சேர்ந்த அனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசு வெளியிட்டவாறே தமிழ்நாடு அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டிருந்தது..
இதையடுத்து மாநிலம் முழுவதும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்… அந்தவகையில், தமிழகத்திலேயே நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் பிரிவில் சாதி சான்றிதழ் முதல் முதலாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிக்கு கிடைத்துள்ளது.
ஆலத்தூர் தாலுகா, காரை கிராமம், மலையப்ப நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகளும், பிளஸ்-2 முடித்து மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ நுழைவு தேர்வு எழுத தயாராகி வரும் மாணவியான கோகிலா என்பவருக்கு நரிக்குறவன் என்ற பழங்குடியினர் இன வகுப்பை சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.. மேலும் 15 பேருக்கு நேற்றைய தினம் சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது.