ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
கேப்டன் கட்சி ஆரம்பிக்கும் போது இருந்த கொள்கையில் இருந்து தற்போது தடமாறிவிட்டதால் தேமுதிகவில் இருந்து விலகினேன் என தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வடசென்னை மாவட்ட செயலாளர் பா மதிவாணன் தெரிவித்தார். சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பா மதிவாணன் திமுகவில் இணைந்தார்.
பின்னர் மதிவாணன் செய்தியாளர்களிடம் பேசும் போது கேப்டன் கட்சி ஆரம்பித்த போது என்ன கொள்கைக்காக கட்சி அரம்பித்தாரோ அதிலிருந்து அவர்கள் முழுமையாக தடமாறி போய் விட்டனர். யார் 41 சீட்டு தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம் என கூறுவது என்ன கொள்கை என்று எனக்கு தெரியவில்லை. எனவே இதற்கு மேல் அங்கே இருப்பது நியாயமாக படவில்லை என்பதால் தேமுதிக விலிருந்து விலகி திமுக வில் இணைந்துள்ளேன் என்று தெரிவித்தார். மேலும் தேமுதிகவில் தற்போது நடப்பது எதுவும் கேப்டனுக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்ததில் தேமுதிக மக்கள் நல கூட்டணியில் அங்கம்வகித்த போது கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து மக்கள் நல கூட்டணி சார்பாக வேட்பாளராக போட்டியிட்டவர் மதிவாணன் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு தேமுதிக கட்சியை தொடங்கினார். 2006 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியிலில் போட்டியிட்ட விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி அமைத்து தேமுதிக 41 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
பொதுமேடைகளில் கூட வெளிப்படையாக பேசும் தன்மை கொண்ட விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மேற்கொள்ள சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய அவர் தற்போது ஓய்வாக வீட்டிலேயே இருந்து வருகிறார். தேமுதிக கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தற்போது நிர்வகித்து வருகிறார்.