சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கான கொண்டாட்டத்துக்கு தயாராகி வந்தனர் அமமுகவினர். மேலும் பெங்களூரில் இருந்து ஆயிரம் கார்கள் படைசூழ சசிகலாவை வரவேற்கவும் தயாராகி வந்தனர். இந்நிலையில் தான் திடீரென சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்ட்டது.
வெறுமனே கொரோனா மட்டுமல்லாமல் சசிகலாவுக்கு குறைந்த இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரை நோய் என பல்வேறு உபாதைகளும் உள்ளது. கொரோனா நேரத்தில் வரக்கூடாத நிம்மோனியாவும் சேர்ந்து கொள்ள சசிகலாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவசர சிகிட்சை பிரிவில் அவருக்கு சிகிட்சையளிக்கப்படுகிறது. சிறையில் இருந்து ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட சசிகலா வீல் சேரில் மருத்துவமனையின் உள்ளே அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் தொண்டர்களைப் பார்த்து 5 விரல்களையும் அகல விரித்து கையசைத்தார். அது பார்க்க அவர் உதயசூரியன் சின்னத்தை காட்டியது போல் இருந்தது. ஆனால் அவர் அப்படியான நோக்கத்தில் காட்டவில்லை.
அதேநேரத்தில் சசிகலா, வெற்றியை குறிக்கும் வகையில் வி என்னும் வடிவம் கொண்ட இரட்டை இலை சின்னத்தையோ, அல்லது கட்டை விரலால் வெற்றி சின்னத்தையோ காட்டவில்லை. இதையெல்லாம் சுட்டிக்காட்டும் சிலர் சசிகலா தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சிறையில் இருந்து வெளியே வந்தாலும் பெரிதாக அரசியல் நகர்வில் இருக்க மாட்டார். அது தெரிந்துதான் எடப்பாடி பழனிச்சாமி இவ்வளவு எதிர்நிலையில் பேசிவருகிறார் என்கிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதால் 6 வருடங்கள் சசிகலாவால் தேர்தலிலும் நிற்கமுடியாது. இப்படியான சூழலில் சசிகலாவின் அந்த கையசைவின் அர்த்தம் அமைதியா? ஆர்ப்பரிப்பா? என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்.