ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி, ஜெய்ப்பூரில் விளையாட உள்ளது. கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழித் தீர்க்க வேண்டிய முனைப்பில் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த முறை சிஎஸ்கே அணி ஜெய்ப்பூரில் விளையாடிய போது தோனி தனது இன்னொரு முகத்தை ரசிகர்கள் மத்தியில் காட்டினார். எப்போதும் ஆட்டோக்காரர் மாணிக்கம் போல் இருக்கும் தோனி, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி பாட்ஷாவாக மாறினார்.
டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் ராஜஸ்தான் அணியில் ஸ்டோக்ஸ் (தற்போது சிஎஸ்கேவில் இருக்கிறார்) 28 ரன்கள் எடுக்க, அந்த அணி 151 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது தோனியும், அம்பத்தி ராயுடுவும் இணைந்து அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், கடைசி 3 பந்தில் 8 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், ஸ்டோக்ஸ் வீசிய பந்துக்கு நடுவர்கள் நோ பால் தரவில்லை. இதனால் கடுப்பான தோனி, நேராக மைதானத்திற்கு வந்து நடுவருடன் சண்டை போட்டார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் கடைசி பந்தில் சிக்சர் அடித்து மிட்செல் சாண்ட்னர் சிஎஸ்கே வெற்றியை உறுதி செய்தார். விதிகளுக்கு மீறி நடந்து கொண்டதாக கூறி தோனிக்கு ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் கேப்டனாக இருந்த ரஹானே தற்போது சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.