ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மண்ணில் ஆடிய 70 சதவிகித போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மீண்டும் ஹோம் மற்றும் அவே வகை போட்டிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு ஆடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சொந்த மண்ணில் ஆடப்படும் பெரும்பாலான போட்டிகளில் வெற்றிபெற்றாலே பிளே ஆஃப் சுற்றுகளுக்கு சென்றிடலாம் என்று அனைத்து அணிகளின் ரசிகர்களும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் அதிகமாக சென்னை அணியே வெற்றிபெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் தனது கோட்டையாக மாற்றியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ள சுமார் 75 சதவிகித போட்டிகளை சிஎஸ்கே அணி வென்றுள்ளது. இவ்வளவு ஏன், அண்மையில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது.
அதற்கு முன் ராஜஸ்தான் அணி 2008ம் ஆண்டில் மட்டுமே சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. மும்பை அணியை தவிர்த்து பெரும்பாலும் சென்னை அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதாக இருந்திருக்கவில்லை. சென்னை அணிக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் அணியே சொந்த மண்ணில் நடைபெற்றுள்ள போட்டிகளில் அதிகமாக வெற்றிபெற்றுள்ளது.
ஜெய்ப்பூர் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றுள்ள 70 சதவிகித போட்டிகளில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இதனால் இன்று இரவு நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெறுவது அவ்வளவு எளிதல்ல. அதுமட்டுமல்லாமல் ஜெய்ப்பூர் பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங் சரிசமமாக எடுபடும். இதனால் பந்துவீச்சில் பலமாக உள்ள ராஜஸ்தான் அணிக்கே அதிக சாதகம் ஏற்பட்டுள்ளது.
கடந்தப் போட்டியில் ஸ்லோ விக்கெட்டாக ஜெய்ப்பூர் பிட்ச் செயல்பட்டாலும், இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கிற்கு சாதகமான விக்கெட்டாகவும், சுழலுக்கு சாதகமான பிட்ச் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஜெய்ப்பூர் பிட்ச்சில் நடைபெற்றுள்ளா 48 போட்டிகளில் 32 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும், 16 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.