ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். இதில் ஐந்து சிக்சர்களும், ஆறு பவுண்டரிகளும் அடங்கும்.
இதனால் ரஹானேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஹானே, நமது மனது சரியான முறையில் இருந்தாலே அனைத்தும் நன்றாக நடக்கும். இரு காதுகளுக்கும் இடையே இருக்கும் விஷயத்தை நாம் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
என்னுடைய கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியுடன் அணுகுகிறேன். கொல்கத்தா ஆடுகளத்தில் நாம் கொஞ்சம் நேரத்தை செலவழித்தாலே அதிரடியாக விளையாட முடியும். எங்கள் அணி வீரர்கள் நல்ல தொடக்கத்தை அளித்திருந்தார்கள். இதனால் பல சாட்கள் விளையாடி ரன் குவிக்கும் வேகத்தை தொடர வேண்டும் என நினைத்தேன்.
நடப்பு சீசனில் நான் விளையாடிய அனைத்து இன்னிங்ஸும் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இன்னும் என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது. தோனி தலைமையில் நான் பல ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறேன். தற்போது சிஎஸ்கேவுக்காக விளையாடும்போது கூட எனக்கு இது கற்றுக் கொள்ள நல்ல பாடமாக தெரிகிறது.
தோனி பேசுவதை நாம் கவனித்தாலே போதும் நாம் களத்தில் நிச்சயமாக ஜொலிக்க முடியும் என ரகானே கூறியுள்ளார். இதனிடையே, முதலில் ரகானே நேற்று ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி சிக்சர் அடித்ததை முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். தம் வாழ்நாளில் பார்த்த சிறந்த ஷாட் அது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஹானே தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருவதால் அவருக்கு இந்திய அணில் இடம் கிடைக்க வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் .